17. 04. 1932- குடிஅரசிலிருந்து.. பால்ய விவாகத் தடைச் சட்டமாகிய சாரதா சட்டம் தோன்றிய நாள்முதல் அதற்கு உண்டான ஆபத்துக்கள் அளவற்றவை வைதிகர்கள் அதை ஒழிப்பதற்குச் சூழ்ச்சிகள் பல செய்து கொண்டு வந்தார்கள். காங்கிரஸ்காரர்களின் சட்ட மறுப்பு ஒருபுறம், அச்சட்டத்தை அமல் நடத்தாமல் தடைசெய்து கொண்டு வந்தது. அரசாங்கத்தாரின் அலட்சிய புத்தி ஒருபுறம் பெருந்தடையாக இருந்து வந்தது, ஆனால் இப்பொழுது அச்சட்டமே செல்லத்தக்கது அல்ல என்பதற்குத் தகுந்த ஆதாரம் அகப்பட்டுவிட்டது.
திரு. வசந்த குமாரதாஸ் என்பவர், 14 வயதுக்கு உட்பட்ட தனது மகளை மணஞ்செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்ததைத் தடை செய்திருந்தும், தடை யுத்தரவை மீறி விவாகம் நடத்தப்பட்டது. அதன் பின் ஜில்லாக் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டு, பேக்கர் கஞ்ச் ஜில்லா நீதிபதி, திரு. வசந்த குமாரதாசை சிவில் ஜெயிலுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். இவ்வுத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கல்கத்தா ஹைக்கோர்ட்டுக்கு விண்ணப்பித்து 1780, 1797 ஆகிய வருஷங்களில் பார்லிமெண்டில் நிறைவேறிய கிழக்கிந்திய கம்பெனி சட்டங்கள் இன்னும் ரத்தாகாமலிருக்கும் போது ஒரு இந்து தனது மகளை விவாகம் பண்ணிக் கொடுப்பதற்கு உள்ள உரிமைகளையும், அதிகாரத்தையும் மறுக்க முடியாது என்று விவாதிக்கப்பட்டது. ஹைக்கோர்ட்டு நீதிபதிகளும் இதை ஒப்புக் கொண்டு ஜில்லா நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.
இவ்வழக்கினால் சாரதா சட்டம் பயனற்றதெனத் தெரிந்துவிட்டது.
இவ்வழக்கில் எடுத்துக் காட்டப்பட்ட 1780ஆம் வருஷத்திய கிழக்கிந்திய கம்பெனிச் சட்டத்தில் 18வது விதியில் சுதேசிகளுடைய பழக்க வழக்கங்களுக்குச் சாதகமளிக்கும் பொருட்டு இந்து, முகம்மதிய சட்டங்களின் படியும் அக்குடும்பங்களின் வழக்கப்படியும் குடும்பத்தின் தந்தைக்கும்,, முதலாளிக்கும் உள்ள உரிமையில் தலையிடுவதில்லை என்று பார்லிமென்ட் தீர்மானிக்கிறது. இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் செய்து கொள்ளும் காரியங்கள் இங்கிலாந்து சட்டங்களுக்கு விரோதமாக இருந்தாலும் அவை குற்றமாகா என்றும்,
1797ஆவது கிழக்கிந்திய கம்பெனிச் சட்டத்தில் 12ஆவது பிரிவில் சுதேசிகளின் சமுகப் பழக்க வழக்கங்களுக்குப் பாதகம் ஏற்படாதிருக்கும் பொருட்டு குடும்ப சம்பந்தமாக இந்து, முசுலீம் தந்தைகளுக்கும், முதலாளிகளுக்கும் உள்ள உரிமையில் எத்தகைய கோர்ட்டு நடவடிக் கையும் தலையிடக்கூடாது என இச்சட்டம் கட்டளையிடுகிறது என்றும் இருக்கின்றன. இந்தப் பழைய துருபிடித்த சட்டங்கள்தான் இப்பொழுது சாரதா சட்டத்திற்கு ஆபத்தை விளைவித்ததாகும்.
இனி சாரதா சட்டம் பயன்பட வேண்டுமானால், பார்லிமெண்டின் இந்தப் பழைய சட்டங்கள் ரத்தாக வேண்டும். அல்லது சாரதா சட்டத்தில், பழைய சட்டங்களில் உள்ள இவ்விதிகள் செல்லத் தக்கவைகள் அல்லவெனக் குறிப்பிடப்படவேண்டும். சாரதா சட் டத்தை நிறைவேற்றிய ஆரம்ப காலத்திலேயே இதைக் கவனித்திருந்தால் இப்பொழுது இத்தகைய சங்கடம் ஏற்பட இடமிருந்திருக்காது. இவ்விரண்டு காரியங்களைச் செய்யும் விஷயத்திலும் பல சங்கடங்கள் ஏற்படக்கூடும். நமது நாட்டு வைதிகர்களும், அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் அரசியல் கிளர்ச்சிக்காரர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.
ஒரு சமயம், இந்திய அரசாங்கத்தாரின் முயற்சியினால், பார்லிமெண்டில் பழைய சட்டங்கள் முழுவதையுமோ, அல்லது அவற்றில் உள்ள மேற்காட்டிய பிரிவுகளையோ ரத்துச்செய்வதற்கு ஏற்பாடாகுமானால், நமது வைதிகர்கள், அரசாங்கம், பழைய வாக்குறுதிகளை மீறுகிறதென்றும், மதத்தில் தலையிடுகின்றதென்றும் கூறி அரசாங்கத்தின் மேல் பழி தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். இதை வருணாசிரமதரும அரசியல் கிளர்ச்சிக்காரர்களும், அரசாங்கத்தைத் தூற்றுவதற்கு ஒரு ஆதாரமாக வைத்துக் கொள்ளுவார்கள். ஆகையால், இச்சமயத்தில், அரசாங்கத்தார், மேற்கண்ட பழைய சட்டங்களையோ அல்லது அவற்றில் உள்ள மேற்காட்டிய விதிகளையோ ரத்துச் செய்ய முன்வரமாட்டார்களென்றே நினைக்கிறோம்.
இனி சாரதா சட்டத்தில் மேற்படி விதிகள் செல்லத்தகவையல்ல வென்று விதி ஏற்படுத்தவும் தற்சமயமுள்ள சட்டசபையில் இயலாதென்பது நிச்சயம் சென்ற கூட்டங்களில், விதவைகளுக்குச் சொத்துரிமையளிக்கும் மசோதாவும், விவாக விடுதலை மசோதாவும் அடைந்த கதியைப் பார்த்தால் விளங்கும்.
இனிச் சட்ட நிபுணர்களின் அபிப்பிராயத்தைப் பார்த்தாலோ அவர்களும் வேறு வேறு அபிப்பிராயப்படுகிறார்கள். இந்திய சட்டசபைக்கு இத்தகைய சட்டஞ் செய்யஉரிமை உண்டு என்று கூறுவோர் சிலர். இத்தகைய சட்டஞ் செய்ய உரிமை இல்லையென்று சொல்லுவோர் சிலர். ஆகவே இந்த வகையிலும் முரண்பட்ட அபிப்பிராயமே இருந்து வருகிறது.
ஆனால் எந்தச் சங்கடத்தையும் அரசாங்கம் கண் வைத்தால் நீக்கி விடலாம். இனி அரசாங்கம் இவ்விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது தான் நமது கேள்வி.
உண்மையிலேயே நமது இந்திய அரசாங்கம், இந்தியர்களின் முன்னேற்றத்தில் நோக்கமுள்ளதாயிருந்தால் சாரதா சட்டத்தைப் பயனுடையதாகச் செய்ய வேண்டும் அல்லது மேற்கண்ட பழைய பார்லிமெண்ட் சட்டமாகிய மனுஸ் மிருதிகளை ரத்துச் செய்ய முயலவேண்டும். இரண்டுமல்லாமல் ஏனோதானோவென்று இருக்குமானால், சீர்திருத்தக்காரர்கள் வெள்ளைக்கார அரசாங்கத்தின் மேல் வைத்திருக்கும் சிறிது நம்பிக்கையும் ஒழிந்து போகும்.
திருமதி. ஹரிவிலாச சாரதா அவர்களும், சளைக்காமல், இதற்கான முயற்சியைச் செய்வாரென்றே எதிர்ப்பார்க்கிறோம். நாமும் நாடெங்கும் கூட்டங்கள் கூட்டிப் பழைய சட்டங்களை ரத்துச் செய்ய முயலும் படியும், சாரதா சட்டத்தை திருத்தும் படியும், அரசாங்கத்தாரை வற்புறுத்துவதாகத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.
இளங்குழந்தைகளை மணம் புரிந்து கொடுப்பது குற்றம் என்று அறிவதற்குப் புத்தியில்லாத வைதிகர்களுக்குச் சட்டத்தினால் அறிவு புகட்ட வேண்டிய நிலையில் நமது நாடு இருக்கின்றது. இந்தப் புத்திசாலிகள் பூரண சுயேச்சை கேட்கின்றார்கள் என்று நம்மைப் பிறர் ஏளனம் பண்ணுவதில் என்ன தவறு இருக்கின்றது. என்றே நாமும் கேட்கிறோம்.
சர். ரெட்டி நாயுடு அவர்கள்
13. 03. 1932 - குடிஅரசிலிருந்து... இந்திய சர்க்காரின் ஏஜெண்டாகத் தென்னாப் பிரிக்காவில் உத்தியோகம் வகித்திருந்த சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்கள் தமது உத்தியோகத்தி னின்றும் நீங்கி இந்தியாவுக்கு வந்து விட்டார். சர்.ரெட்டிநாயுடு அவர்கள் தென்னாப் பிரிக்காவில் உள்ள இந்தியாவின் நன்மைக்காக உண்மை யாகவும், அஞ்சாமலும் உழைத்தவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சர். ரெட்டிநாயுடு அவர்கள் சமுதாய ஊழியத்தில் அளவு கடந்த பற்றும், உண்மையாகத் தனது கொள்கைகளைக் கைப்பற்றி நடக்கும் தன்மையும் உள்ளவர் என்பதை அவரை நேரில் அறிந்த நமது மாகாண வாசிகள் அனைவரும் அறிவர். இவருக்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஏஜெண்டாயிருந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரி களைக் காட்டிலும் ஊக்கமாகவும், உண்மையாகவும் இந்தியர்களுக்காக உழைத்தவராவார்.
ஆனால் மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்த காலத்தில், அவர் எங்கேயாவது மூச்சு விட்டாலும், தும்மினாலும், இருமினாலும் அவற்றையெல்லாம் நமது நாட்டுப் பத்திரிகைகள் பிரமாதமாக வெளியிட்டு விளம் பரம் பண்ணி வந்தன. அதற்குக் காரணம் அவர் பார்ப்பனராயிருந்ததும், நமது நாட்டுப் பத்திரிகை களும் பார்ப்பனர்களுடையதாயிருப்பதுமேயாகும். ஆனால் சர், ரெட்டி நாயுடு அவர்களோ பார்ப்பனரல்லாதார்; அதிலும் வருணாசிரம தருமப் புரட்டுகளில் நம்பிக்கையற்ற ஓர் சீர்திருத்தவாதி ஆகையால் இவருடைய உண்மையான ஊழி யத்தைப் பற்றிக்கூட எந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளும் எடுத்துக்காட்டாதிருந்தன. இது நமது நாட்டு வழக்கமாகவே இருந்து வருகின்றது.
இதனாலேயே ஒன்றுக்கும் உதவாப் பார்ப்ப னர்களும் கூடப் பெரிய தலைவர்களாகவும், பிரபல தேசாபிமானிகளாகவும் ஆகிவிடுகின் றார்கள் உண்மையாக நாட்டு மக்களுக்கு உழைக் கும் பார்ப்பனரல்லாதார்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் குடத்துள் வைத்த விளக்கைப் போல் இருக்கின்றார்கள் என்பது நமது நாட்டுப் பார்ப் பனப் பத்திரிகைகளின் போக்கையறிந்தவர் களுக்குத் தெரிந்த விஷயமாகும்.
இறுதியாக நாம், சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்களுடைய ஊழியத்தைப் பாராட்டுகிறோம். இனி அவர் நமது நாட்டில் உள்ள வருணாசிரம தரும சூழ்ச்சிகளையெல்லாம் ஒழித்து உண்மை யான சமதருமத்தைப் பரவச் செய்ய முன் வருவாரென நம்புகின்றோம்.
வெற்றிக்குறி
03.07.1932 - குடிஅரசிலிருந்து...
திருச்சியில் உயர் திருவாளர் எம்.டி. சோம சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. நமதன்பர் சோமசுந்தரம் அவர்கள் சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி. டி. ராஜன் அவர்களது சிறிய தந்தை யென்பதும், தொண்டை மண்டல முதலி யார் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவ ரென்பதும் நேயர்கள் அறிந்ததே. அன்னார் தலைமையில் புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமுகத்தில் ஒரு பெரும் புரட்சியையுண்டாக்கி விட்ட தென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தச் சமுகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற இறு மாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதிக மதாச்சார சடங்குகளையோ எக்காரணங் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள். அத்தகைய ஒரு பெரிய வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் நடந்ததென்றால், அது நமதியக்கத்திற்கு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்குத் தங்கள் தினசரி வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க இன்றியமையா தனவாய் இருக்கின்றனவென்பது நன்கு புலனாகும். நமது கொள்கைகள் நாடெங்கும் பரவி சர்வவியாபகமாக வேண்டுவதற்குப் பார்ப் பனியக் கோட்டைகளும், சைவக் கோட்டைகளும் தகர்த்தெறியப்பபட வேண்டுமென நாம் பன் முறையும் இடித்திடித்துக் கூறிவந்திருக்கிறோம். தலைவரவர்கள் தனது முன்னுரையில் சுயமரி யாதை உலகெலாம் பரவவேண்டுமென அவாவு வதையும், இத்தகைய மணங்கள் நாட்டிற்கு எவ் வகையிலும் புதிதன்று எனவும், இது பழங்கால முறையே என்றும் குறித்திருப்பதைப் பாராட்டு வதோடு இத்தகையத் திருமணங்கள் ஏராளமாக நடைபெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.