Banner

வரலாற்று சுவடுகள்

மவுலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்புவோரின் கையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டுமென்றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிற தென்றும் சொல்லி வருகையில் நாம் இந்துக் களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும் 21 கோடி இந்துக்களைப் பணிய வைக்க முடியும்.

நமது நபிகள் நாயகம் காலத்தில் 15 பேர் சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள். ஆகையால் 7 கோடி மகம்மதியர்கள் 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்டமல்ல என்று சொன்னாராம். இதை சுதேசமித்திரன் இந்துக்களுக்கு மகம்மதியர்கள் பேரில் துவேஷம் உண்டாகும்படி மௌலானா முகமதலியின் முழக்கம் என்கிற தலைப்பின் கீழ் எழுதி யிருக்கிறது. மவுலானா பேசியவைகளில் நமக்கொன்றும் ஆச்சரியமில்லை. மௌலானா கணக்கில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறோம். 21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ் லிம்கள் தேவையில்லை.

இதே 21 கோடி இந்துக்கள் என்போர் களை முக்கால் கோடிக்கும் குறைவான பிராமணர்கள் ஆயிரக் கணக்கான வருஷங்களாய் தலையெடுக்க வொட்டாமல் பணிய வைத்திருக்க வில்லையா? விபசாரத் தரகில் ஜீவிக்கும் பிராமணனைக் கூட ஜமீன்தாரரான பிராமணரல்லாத இந்து தூதுக் கடிதம் வாங்கும் போதும் சுவாமி என்று கூப்பிடவும், தலைவணங்கி கும்பிடவும் அவன் ஆசீர்வாதம் சொல்லி கடிதம் கொடுக்கவும் தானே நடந்து வருகிறது.

ஒரு சமூகம் எவ்வளவு பெரிய எண்ணிக்கை உள்ளதானாலும் தங்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் ஒருவரை ஒருவர் தீண்டாதவராய், பார்க்கக் கூடாதவராய் மதித்துக்கொண்டு மக்களைப் பிரித்து வைத்துஒருவர் உழைப்பில் ஒருவர் பிழைக்க நினைத்துக் கொண்டு இருப்பவர்களை உள்ளே வைத்திருக்கும் வரையில் மிகச் சிலரால் பணிய வைத்து விடலாம்.

இதற்கனுகூலமாக நமது நாட்டில் பிராமணியம் இருக்கும் வரை நம்மை யார் வேண்டு மானாலும், எப்படி வேண்டுமானாலும் சுலபமாய் பணிய வைக்கமுடியும். ஆதலால் மௌலானா சொல்லு வதில் கணக்குத் தவறு இருக்கிறதே தவிர அதிசயம் ஒன்றும் இல்லை. அவரும் நாம் மகமதியர்களோடு சண்டை போட நினைத் தால்தான் தன்னால் இந்துக்களைப் பணிய வைக்க முடியும் என்கிறாரே தவிர மற்றபடி பிராமணர்கள் தங்களுக்கு அன்னமளிப்பவர்களைப் பணிய வைத்திருப்பதைப்போல் அல்ல. ஆதலால் மௌலானா சொன்னதில் யாரும் குற்றங் கருத மாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம்  - 23.05.1926

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் செங்கல்பட்டு ஜில்லாவில் பிராமணர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகையில் பல்லா வரத்தில் ஒரு பிராமணர் அக்கிராசனத் தின் கீழ் பிராமணர்களின் நற்சாட்சிப் பத்திரமான வரவேற்புப் பத்திரம் பெற்றுக் கொண்டு தனது திருவாக்கால்  மேல் நாட்டாருக்கு வயது 42, கீழ் நாட் டாருக்கு வயது 22;

நமது நாட்டில் பஞ்சம் அதிகம்; ஆதலால் ஸ்ரீமான் எ.இராமசாமி முதலி யாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள். அவர் அடாத செயல்கள் செய்வதால்தான் அவருக்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறேன்., ஸ்ரீமான்கள் எம்.கே. ஆச்சாரியார் வகையறாக் களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்ற பேசினாராம்.

இவருக்கு ஆத்மா இருக்கிறதா என்பதே நமது சந்தேகம். அய்யோ!  நமது முதலியாரின் புத்தி இப்படியும் சபலமாய்ப் போகுமென்று  நாம் எந்தக் காலத்திலும் எதிர்பார்த்ததேயில்லை. ஸ்ரீமான்கள் எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, ஏ.ரெங்கசாமி அய்யங்கார் வகையறாக்களைவிட - இவர்களது நாணயத்தைவிட - ஸ்ரீமான் எ.இராமசாமி முதலியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? நமது முதலியாருக்கு என்ன கெடுதி செய்தார்; என்ன அடாத செய்கை செய்து விட்டார்? அல்லது அவர்கள் கட்சிக்கும் இவர்கள் கட்சிக்கும் வித்தியாசம்தான் என்ன?

ஸ்ரீமான் சீனிவாசய்யங் கார் கோயமுத்தூரில் பேசிக் கொண்டிருக்கும்போது தனது முழு வேலையும் செங்கல்பட்டு ஜில்லா விலேயே இருப்பதாகவும், தன்னுடைய கணங் களை யெல்லாம் அங்கேயே அனுப்பி எப்படியாவது ஸ்ரீமான் எ.இராமசாமி முதலியாரை ஒழித்துவிடப் போவதாயும் உறுதி சொன்னாராம். அவரது திருவாக்கைப் பரிபாலிக்க நமது முதலியார் மர உரி தரித்துக்கொண்டு செங்கல்பட்டு ஜில்லாவுக்குப் புறப்பட்டு விட்டார் போலும்.

அல்லது பிராமண அக்கிராசனமும் பிராமண நற்சாட்சிப் பத்திரமும் நமது முதலியாரைமயக்கிவிட்டது போலும் இந்தப் பிராமணர்களே நமது முதலியாருக்கு வரவேற்புப் படித்துக் கொடுத்தாலும் உண்மை அந்தணர் என்று வெளியில் சொன்னாலும் இவரைப் பற்றி இந்த பிராமணர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களென்பதை ஒரு சிறிதாவது ஞாபகப்படுத்திப் பார்த்தாரா? இப்படி ஒரு ஆசாமியை தங்கள் வசப்படுத்திக் கொண்டு, அவர் வகுப்பார் மீதே வசைமொழிப் புராணம் பாடும்படி செய்து நமது  காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகிறோம் என்றுதான் நினைப் பார்கள்.

அவர்கள் வேலை முடிந்த பிறகு திரு.முதலி யாரைக் கண்ணெடுத்துப் பார்ப்பார்களா? சுயராஜ்யக் கட்சியின் அயோக்கியத்தனத்தை ஒரு நாள் வெளியில் எடுத்துச் சொன்ன தற்குத்தானே சாது முதலியார், உண்மை அந்தண முதலியார், மாரீச முதலியாராக மாற்றப்பட்டார்?

மேல் நாட்டாருக்கு வயது 42, கீழ் நாட்டாருக்கு வயது 22; ஆதலால் எம்.கே.ஆச்சாரியாருக்கு ஓட்டுக் கொடுங்கள், எ.இராமசாமி முதலியாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள்  என்று சொன்னால் என்ன அர்த்தம்? எம்.கே. ஆச்சாரியார் என்ன பிரம்மாவா? எல்லோர் தலையிலும் நூறு, நூறு வயது என்று எழுதி விடுவாரா? அல்லது எ.இராமசாமி முதலியார் எமனா?

22 வயதிலேயே எல்லோரையும் கொண்டுபோய் விடுகிறாரா? அய்யோ! பாவம்! திரு.வி.கலியணசுந்தர முதலியாரின் கல்வியும் - பாண்டித்தியமும் பிராமணரல்லாதார் பிறவியும் செங்கல்பட்டு ஜில்லா பாமர ஜனங்களிடம் போய் மேல் நாட்டாருக்கு 42- வயது, கீழ் நாட்டாருக்கு 22- வயது. ஆதலால் இராமசாமி முதலியாருக்கு ஓட்டுப் போடாதீர்கள்; எம்.கே.,ஆச்சாரியாருக்குப் போடுங்கள் என்று சொல்லுவதற்குத் தானா பிரயோஜனப்படவேண்டும்.

இவையனைத்தையும் பாமர ஜனங்கள் அறியும் நாள் எதுவோ அதுதான் விடுதலை நாள். அதுவரை ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் போன்றோர்கள் நாள்தான்.

- குடிஅரசு  - துணைத் தலையங்கம் -  23.05.1926

இதைப்பற்றி குடியரசு பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணா திக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.

அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கி யிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை,

சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

-  குடிஅரசு  - விமர்சனம் -  6.6.1926

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டது போல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர்.

எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.

குடிஅரசு  - வேண்டுகோள்  - 23.05.1926

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப்பட்டிருப்பதாகக் காங்கிரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அறிவிக்கிறார் என்று சுதேசமித்திரனில் குறிப்பிட்டிருக்கிறது.  பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித்தார்கள்? ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் நியமித்தார், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்.

யாருடைய பணம்? ஊரார் பொதுப்பணம். என்ன பிரச்சாரம்? பிராமணத் தேர்தல் பிரச்சாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம்ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது;

பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள், மகாபுத்தி சாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி அய்யங்காரும், எஸ்.சீனி வாசய் யங்காரும் சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்காரும், எம்.கே.ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது  நாங்கள் தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய தியாகம் செய்தவர்கள்; கதர், மது விலக்கு, தீண்டாமை முதலிய வைகளில் அதிக நம்பிக் கையுடையவர்கள்; காரியத்திலும் நடத்து கிறவர்கள்;

அதனால் தான் தமிழ்நாட்டு உண்மை தேச பக்தர்களான ஸ்ரீமான் கலியாண சுந்தர முதலியார் போன்றவர்கள் எங்கள் அய்வர்களையே தமிழ்நாட்டிற்குத் தலைவர்களாகத் தெரிந்தெடுத்து எங்களையே பின்பற்றுகிறார்கள்; நாங்கள்தான் தமிழ் நாட்டுக்குத் தலைமை வகிக்க யோக்கியதை உள்ளவர்கள்.

எங்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தேசத் துரோகிகளும் வகுப்பு நலன் நாடுபவர் களுமான குறுகிய புத்தியுடையவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் எல்லா இந்தியத் தலைவராவார்கள். மற்றபடி வேறு என்ன பிரச்சாரம் செய்யக் கூடும்? தமிழ்நாடே! உன் தலைவிதிதான் என்ன? உன்னை இத்தலைவர் களுக்குக் காட்டிக் கொடுத்த தர்மசீலர்களுக்கு ஆயுள்தான் எவ்வளவோ?

- குடிஅரசு  - செய்தி விளக்கம் - 16.5.1926

அண்மைச் செயல்பாடுகள்