Banner

வரலாற்று சுவடுகள்

கிறித்தவ மதப் பிரசாரமா? என்ற  மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப் பொன்றெழுதி, சென்னைக் கடற் கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரக ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத் தகைய கிறித்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிர சிலிருந்த காலத்தில்  தைரியங் கொள்ள வில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான்.

இக்குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வழிகிறது.  யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி தூட்சித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்? என்று எழுதி பொதுவாகக் கிறித்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களி டையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்கியத் தனமும் சூழ்ச்சியுமானதென்று கவனி யுங்கள்.

மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரகங்களிலும் அடங்கிக் கிடக்க வில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறித்தவ மதமோங்கி விடாது. இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறை யனாயிருக்கும் கோவிந்தனை பக்கத் தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோச ஆகிவிட்டால்  கைலாகு கொடுப் பான்.

ஆகவே கிறித்தவ மதத்தை இப்பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது ஸ்ரீமான் ஆரியா ஆதரிக் கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பன னுடைய வாய் வேதாந்தத்தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களை ஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.

- குடிஅரசு, கட்டுரை, 11.07.1926


டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்

முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும்
டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முலீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார்.

1. இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட் டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது.

2.முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்.

3. முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது.

என்று பேசியிருக்கிறார். (இது 5.7.26ல் மித்திரன் 4-வது பக்கம் 5-வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன்னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திர மாய்ப் போய்விட்டது.

ஒன்று நிர்மாணத் திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டிலொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த செய்யப் படும் சூழ்ச்சியாகிய பார்ப்பனக் காங்கிரசோ, சுயராஜ்யக் கட்சியோ தேசத் துரோகத்திற்கும் மற்ற வகுப்புத் துரோகத்திற்கும்தான் உதவும் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அதில் சேரக்கூடாது என்பதும் டாக்டர் கிச்சுலுவின் உபதேசத்தால் விளங்கி விட்டது. ஆதலால் இனியாவது மகமதியர்கள் போலிகளை நம்பி மோசம் போகாமல் கண் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926

முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத் தியாதாசப் பண்டிதரவர்களால் தமிழன் என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத் திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது.  அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று.

மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத் திருக்கும் திரு.பி.எம். இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாத முதல் வெளியிடப் படுமென தெரிவிக் கிறோம். திரு. இராஜத் தினம் அவர் களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறு மென நம்புகி றோம்.

- குடிஅரசு -  செய்தி  04.07.1926

அயோத்திதாச பண்டிதர் தாழ்த் தப்பட்டோரின் பாதுகாவலர் - பார்ப் பனர்களின் பிறவி எதிரி! ஒரு பைசாத் தமிழன் எனும் இதழ் நடத்தி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை எழுச்சியூட்டியவர்! மிகச் சிறந்த சித்த மருத்துவர்! மிகச் சிறந்த கல்விமான்! மிகச் சிறந்த பட்டறிவாளர்!


பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடுகாரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ராஜரிஷி பிர்மரிஷி என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று என்னமாய் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினா மாக்களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை.

எங்கோ ஒரு மூலையில் ஒன்றரை அங்கு லத்தில் பொது ஜனங்கள் ராஜினா மாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்ட வில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுத வில்லை.  ஒரு வயிற்றுச் சோத்துப் பார்ப்பனன் ஒரு உத்தி யோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பி யிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டு போய் இந்தத்  தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்.

இது போலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வருகிறார்கள்.  இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத் தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன்வரலாகாதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்!

பார்ப்பனரல்லாத பத்திரிகைளைப் பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும் போது பத்திரிகையை பரப்ப  இன்று என்ன செய்வது என்று யோசி யுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச் சாட்சியைக்  கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை ஸ்ரீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் பிராமணலரல்லா தாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும் பலித்துவிடும்!

- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926

- தந்தை பெரியார்

இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்ச மும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன்.

ஆதி திராவிடர்களுக் கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவ தாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும்.

நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங் களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும். என்று சொல்லிவிட்டு நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை.

ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிற வர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப் பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத் தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை.

பறையர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. பறையர் என்கிற ஜாதிப் பெயரைவிட சூத்திரர் என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை. ஏனென்றால் சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள்.

இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்பந்தம். ஆகையால் என் போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படு வோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்று கிறது.

உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக் கும் அறியாமை யால், தங்களை மற்றவர்கள் தாழ்மை யாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.

இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதங் கண்டு பிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக் கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை, துணி துவைப்ப தில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக்காமலும் குளிக்காமலும் இருப்ப தற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி, வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன்.

குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்து விட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும் வாயும் நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனைப் பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் பாவி யென்பதை நினைத்துப் பாருங்கள்.

அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல.

உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில் லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று.

மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியாரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்பதாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லு கிறார்கள்.

ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவ தற்குத் தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு பிராமணர்கள் முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை நல்ல ஜாதியும், தொடக்கூடியவர்களாயு மிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்.

அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு.

மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக, மதுவையும் மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன்.

அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15, 20 கோடி ரூபாய் பெரும்படியானதை யெல்லாம் நீங்க ளேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.

மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென் பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக் கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதைச் சொல்லா மலிருக்க முடியவில்லை.

அதாவது, நீங்க ளாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அனாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும்.

சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி  என்று கூப்பிடக் கூடாது. வேண்டு மானால் அய்யா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள். என்று பேசி முடித்தார்.

(காரைக்குடி - சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில்  06-04-1926 ந்தேதி ஆற்றிய சொற்பொழிவு)

- குடிஅரசு -  25.04.1926

(திருவாரூர் திருத்தியாகராஜனின்  திருத்தேர்   தீக்கிரையாயிற்று)

தியாகராஜ பெருமானின் தேரானது 09.06.1926ந் தேதி தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக் கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப்பெரியது திருவாரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங்களும், 5000த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்களும் வேண்டும். இவர்கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம்.

தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப் பாட்டம் எதற்கு? இதை நினைக்கும் போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது,
ஒரு குருவுக்கு நான்குசிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குருவானவர் கடையில் ஊசி வாங்கிக் கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர்களிடம் கட்டளை யிட்டார்.

அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளை யிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப்போனால் கோபித்துக் கொள் ளுவார் என்று ஒரு நீண்ட பனைமரத் துண்டில் ஊசியைக் குத்தி நால்வரும் வழிநெடுக இறக்கி இறக்கி சுமந்து சென்று குருவை அடைந்ததும் அவர் அறியும்படி தொப்பென்று போட்டு ஊசியைத்தேடி காணாமல் போகவே நடந்ததைச் சொன்னார்கள்.

குரு கோபித்துக் கொண்டு, உங்களுக் குள்ள பக்திக்குத் தகுந்த புத்தியில்லை யென்று சொல்லி வேறொரு ஊசி வாங்கி பனைமரத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி தூக்கி வரும்படி கட்டளையிட்டார். உடனே அவர்கள் இதனால் ஒரு நல்ல புத்தி கற்றுக் கொண்டதாக சந்தோஷித்து மறுபடியும் ஊசி வாங்க கடைக்குப் போகும் போது, ஒருவன் குரு ஊசிக்கு மாத்திரம் காசு கொடுத்தாரே யல்லாமல் கயிறு வாங்க  காசுக்கு என்ன செய்கிறது என்று கேட்க மற்றவர்கள் தோஷம், தோஷம் இதெல்லாம் நினைக்கவே கூடாது; நினைப்பது குருத் துரோகமாகும் என்று சொல்லி நினைத் ததற்குப் பிராயச்சித்தம் செய்து கொண் டார்கள்.

அதே போலிருக்கிறது திருவாரூர் தேரில் சுவாமியை வைத்து இழுக்கும் கதை.தேசம் வறுமைப் பிணியால் வதையுற்று கல்வியற்று சிறுமைச் செயலால் சீரழிந்து இருக்கும் இதுகாலை 2000 வேலி நிலமுள்ள தியாகராஜ சுவாமிகளின் உற்சவத்திற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு தொழி லாலயங்களும் கல்லூரிகளும் அமைத்து வறுமைப் பிணியால் வாடும் மக்களுக்கு வேலை கொடுத்து போஷித்தும், கல்வி போதித்து சன்மார்க்க பேதம் புரிந்துவர பிரயோஜனப்படுத்த லாகாதோ? - குடிஅரசு  துணைத் தலையங்கம்  - 13.06.1926

மவுலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்புவோரின் கையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டுமென்றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிற தென்றும் சொல்லி வருகையில் நாம் இந்துக் களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும் 21 கோடி இந்துக்களைப் பணிய வைக்க முடியும்.

நமது நபிகள் நாயகம் காலத்தில் 15 பேர் சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள். ஆகையால் 7 கோடி மகம்மதியர்கள் 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்டமல்ல என்று சொன்னாராம். இதை சுதேசமித்திரன் இந்துக்களுக்கு மகம்மதியர்கள் பேரில் துவேஷம் உண்டாகும்படி மௌலானா முகமதலியின் முழக்கம் என்கிற தலைப்பின் கீழ் எழுதி யிருக்கிறது. மவுலானா பேசியவைகளில் நமக்கொன்றும் ஆச்சரியமில்லை. மௌலானா கணக்கில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறோம். 21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ் லிம்கள் தேவையில்லை.

இதே 21 கோடி இந்துக்கள் என்போர் களை முக்கால் கோடிக்கும் குறைவான பிராமணர்கள் ஆயிரக் கணக்கான வருஷங்களாய் தலையெடுக்க வொட்டாமல் பணிய வைத்திருக்க வில்லையா? விபசாரத் தரகில் ஜீவிக்கும் பிராமணனைக் கூட ஜமீன்தாரரான பிராமணரல்லாத இந்து தூதுக் கடிதம் வாங்கும் போதும் சுவாமி என்று கூப்பிடவும், தலைவணங்கி கும்பிடவும் அவன் ஆசீர்வாதம் சொல்லி கடிதம் கொடுக்கவும் தானே நடந்து வருகிறது.

ஒரு சமூகம் எவ்வளவு பெரிய எண்ணிக்கை உள்ளதானாலும் தங்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் ஒருவரை ஒருவர் தீண்டாதவராய், பார்க்கக் கூடாதவராய் மதித்துக்கொண்டு மக்களைப் பிரித்து வைத்துஒருவர் உழைப்பில் ஒருவர் பிழைக்க நினைத்துக் கொண்டு இருப்பவர்களை உள்ளே வைத்திருக்கும் வரையில் மிகச் சிலரால் பணிய வைத்து விடலாம்.

இதற்கனுகூலமாக நமது நாட்டில் பிராமணியம் இருக்கும் வரை நம்மை யார் வேண்டு மானாலும், எப்படி வேண்டுமானாலும் சுலபமாய் பணிய வைக்கமுடியும். ஆதலால் மௌலானா சொல்லு வதில் கணக்குத் தவறு இருக்கிறதே தவிர அதிசயம் ஒன்றும் இல்லை. அவரும் நாம் மகமதியர்களோடு சண்டை போட நினைத் தால்தான் தன்னால் இந்துக்களைப் பணிய வைக்க முடியும் என்கிறாரே தவிர மற்றபடி பிராமணர்கள் தங்களுக்கு அன்னமளிப்பவர்களைப் பணிய வைத்திருப்பதைப்போல் அல்ல. ஆதலால் மௌலானா சொன்னதில் யாரும் குற்றங் கருத மாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம்  - 23.05.1926

அண்மைச் செயல்பாடுகள்