
நியூயார்க், ஆக. 5- சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 1 1/2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை மேர்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 21 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அய்.நா. சபையும், உலக நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருந்தும் எந்தவித முடிவும் ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து அதிபர் பஷர் அல்-ஆசாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர் பதவி விலக மறுத்துவிட்டார். இந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என அய்.நா. சபையில் சவுதி அரேபியா தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி வாக்கெடுப்பு நேற்று நடந்தது.
அதில், அய்.நா. வில் உள்ள 193 நாடுகள் கலந்து கொண்டு வாக்களித்தன. அதில் 133 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இந்தியா உள்ளிட்ட 31 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. ரஷியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.