
டமாஸ்கஸ்,ஜூலை.29-சிரியாவில் அதிபர் பஷர்-அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த சில வருடங்களாக போராடி வரும் பொதுமக்களை அடக்க ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் இதுவரை 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் தீவிரம் அடைந்துள்ளது.
போராடும் மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை களம் இறங்கியுள்ளது. அவர்கள் துருக்கி எல்லையில் உள்ள நகரங்களை தங்கள் பிடியில் வைத்துள்ளனர். மேலும் சிரியாவின் 2-வது பெரிய தொழில் நகரமான அலெப்போவையும் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே அந்த நகரை மீட்பதில் ராணுவம் தீவிரமாக உள்ளது. புரட்சி படையுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது. அங்கு டாங்கிகளும், ராணுவமும் குவிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அவை தவிர ஹெலிகாப்டர்களில் பறந்து போராட்டக்காரர்கள் மற்றும் புரட்சி படை மீதும் ராணுவம் குண்டு வீச்சு நடத்துகிறது. இந்த தாக்குதலில் அலெப்போ நகரில் மட்டும் 29 பேர் உயிரிழந்தனர். இவை தவிர சிரியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 100 பேர் பலியாகினர்.
அலெப்போ நகரை சுற்றியுள்ள பல இடங்களில் இன்றும் தொடர்ந்து ராணுவத்துக்கும் புரட்சி படைக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. ராணுவ டாங்கிகளும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அதில் ஏராளமான பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
தற்போது புரட்சி படையின் கை ஓங்கி உள்ளது. இதற்கு துருக்கி, சவுதிஅரேபியா மற்றும் கத்தார் நாடுகளின் ரகசிய உதவிதான் காரணம் என சிரியா அதிபர் ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.