
புதுடில்லி,ஜூலை.22 - நாட்டின் 13-வது குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை . குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்தது. இதில் நாடாளுமன்ற எம்.பி.க்கள், மாநில சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர்.
ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று, பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார்.
முதலில் எம்.பி.க்கள் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பிரணாப் முகர்ஜி 527 எம்.பி.க்களின் ஓட்டு கிடைத்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவிற்கு 206 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர். 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பிரணாப் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 893 மதிப்பு ஓட்டுக்களை பெற்றுள்ளார். சங்மா 2 லட்சத்து 73 ஆயிரத்து 116 ஓட்டுக்கள் மதிப்பு பெற்றுள்ளார்.
நாட்டின் 13-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப்பிற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வரும் 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 76 வயதான பிரணாப் வரும் 2017-ஆம் ஆண்டு வரை குடியரசு தலவராகப் பதவி வகிப்பார்.