
புதுடில்லி, ஜூலை 6- பகுஜன் சமாஜ்கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.
8 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஅய் தாக்கல் செய்த சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு மே மாதம் மாயாவதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தனது வருமானம் நேர்மையானதுதான் என்று வருமான வரி தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளதையும், அதை தில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ளுமாறு சிபிஅய்க்கு உத்தரவிட வேண்டும் என்று மாயாவதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிபிஅய்யின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்துள்ளது.