
சென்னை, ஜூன் 30- பொறியியல் கட்-ஆப் ரேங்க் பட்டியலை இன்று வெளியிட்ட உயர் கல்வித் துறை செயலாளர் சிறீதர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5006 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 65 பேருக்கு ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஜாதி பிரிவுகள் அடிப்படையில் 7 வகையான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 2 ஆயிரத்து 92 பேரும், மாற்றுத் திறனாளிகள் 196 பேரும், விளையாட்டு வீரர்கள் 3 ஆயிரத்து 398 பேரும் விண்ணப்பித்துள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 85 ஆயிரத்து 4 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
தகுதி உள்ள அனைவருக்கும் தரவரிசை எண், கலந்தாய்வு நடைபெறும் தேதி ஆகியவை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு வருகிற 5 ஆம் தேதி நடக்கிறது.
தொழில் கல்வி பிரிவினருக்கு 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 12 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல் கட்ட பொது கலந்தாய்வு ஜூலை 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 18 ஆம் தேதி வரை நடக்கிறது.
2 ஆவது கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக 30 ஆயிரம் மாணவ- மாணவிகள் பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் சீட் கிடைக்கும்.
தமிழ் நாட்டில் 504 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 254 இடங்கள் உள்ளன.
இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 89. இது தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் 12 ஆயிரத்து 328 இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்துள்ளன.
எனவே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 411 ஆக அதிகரித்து உள்ளது. தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு மூலம் 80 ஆயிரத்து 37 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.