
பெங்களூரு, ஜூன் 13- காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா கைதிலிருந்து தப்பிப்பதற்காக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வெளிநாட்டு பெண் ஒருவர் தன்னை நித்தியானந்தா பாலியல் வன்முறை செய்தார் என்று நித்தியானந்தாமீது குற்றம்சாட்டினார்.
இதற்கு விளக்கம் தெரிவிக்க நித்தியானந்தா பெங்களூருவிலுள்ள பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது, பாலியல் வன்முறை செய்தது உண்மைதான் என்றும், அதற்கு ஆதாரமாக நீதிமன்ற சம்மன் உள்ளது என்றும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் நித்தியானந்தாவிடம் வாதிட்டார்.
இதனை பொறுக்க முடியாத நித்தியானந்தா அந்தச் செய்தியாளரை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கும், நித்தியானந்தா சீடர்களுக்குமிடையே தள்ளு முல்லு ஏற்பட்டது. செய்தியாளர் தாக்கப்பட்டார்.
இதனால் கொதிப்படைந்த செய்தியாளர்கள் இனிமேல் நித்தியானந்தா விளக்கம் அளித்தாலும் அந்தச் செய்தியை வெளியிடமாட்டோம் என்று தீர்மானித்தனர்.
மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம் ரெட்டியின் அறிக்கை வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்தார்.
அதேபோல், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம் ரெட்டி அறிக்கையினை முதலமைச்சரிடம் கொடுத்தார்.இதனைத் தொடர்ந்து நித்தியானந்தா ஆசிரமத்திற்குச் சீல் வைக்கவும், ஆசிரமத்தை சோதனையிடவும் ஆந்திர முதலமைச்சர் சதானந்தா கவுடா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நித்தியானந்தா தலைமறைவானார்.
நித்தியானந்தாவின் பிடதி கூடாராமும் காலியானது.
ஆசிரமத்தின் அறைகள் சோதனை செய்யப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே இன்று நித்தியானந்தா ராம்நகரம் மாவட்ட நீதிபதி கோமளா முன் சரணடைந்தார்.
தம்மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நித்தியானந்தா.
வழக்கு ரத்து செய்யப்படததால், நித்தியானந்தா கைது செய்யப்படுவது உறுதியானது.
கடந்த இரண்டு நாள்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா, கைதாவதிலிருந்து தப்பிப்பதற்காக சரணடைந்துள்ளார்.
சரணடைந்த நித்தியானந்தாவை சிறையில் அடைக்கும்படி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ராம்நகர் கிளைச் சிறையில் நித்தியானந்தா அடைக்கப்பட்டார்.
நாளை மீண்டும் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.