
வாஷிங்டன், மார்ச் 16- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது.
இதுகுறித்து வாஷிங்டனில் நடந்த பேட்டியின் போது அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலன்ட் கூறியதாவது:-
சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ விவகாரத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பாக என்னால் தெளிவாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இருந்தாலும் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த கருத்துகளை பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.
சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில் செயல்பட்டவர்கள் அதற்காக பொறுப்பேற்க வேண்டும். அதற்காகதான் அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே சேனல்-4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற வீடியோ அய்.நா. மனித உரிமை கவுன்சில் ஒளிபரப்பபட இருப்பதாக தெரிகிறது.
அதற்கான முயற்சியில் சேனல்-4 ஈடுபட்டுள்ளது. அந்த சானலின் ஒளிபரப்பு நிபுணர்கள் ஜெனீவா சென்றுள்ளனர்.
வருகிற 19 ஆம் தேதி ஒளிபரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.